ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்த பிரித்தானிய உயர் ஸ்தானிகர்-ஜெனிவா உட்பட பல விடயங்கள் ஆராய்வு

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், சாரா ஹல்டன் (Sarah Hulton) அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று, இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு பற்றி கருத்துத் தெரிவித்தார். வணிகப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்துவரும் முயற்சிக்கு, பிரித்தானிய அரசாங்கம் வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாகவும் உயர்ஸ்தானிகர் அவதானம் செலுத்தினார்.

2030ஆம் ஆண்டாகும்போது, இந்நாட்டு வலுசக்தி உற்பத்தியில் 80சத வீதத்தை மீள்பிறப்பாக்க வலுசக்தி மூலம் பெற்றுக்கொள்வதற்கு, அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு அவசியமான தொழிநுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும் சூரிய சக்தியை களஞ்சியப்படுத்தல் மற்றும் பரிமாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவும், சாரா ஹல்டன் அவர்கள், இணக்கம் தெரிவித்தார்.

சேதனப் பசளைப் பயன்பாட்டின் மூலம் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி எடுத்தத் தீர்மானத்தை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாராட்டினார். 20.8சத வீதமான “வன ஒதுக்கீட்டை” 30சத வீதம் வரை உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்கு அவசியமான அறிவு மற்றும் பொறிமுறைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு, உயர்ஸ்தானிகர் தனது அவதானத்தைச் செலுத்தினார்.

“எக்ஸ் – பிரஸ் பர்ள்” கப்பல் மூலம் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்வதற்கு, பிரித்தானியாவின் தொழிநுட்ப ஒத்துழைப்பை வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். ஜெனிவா முன்மொழிவு தொடர்பாகவும் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட ஏனைய விடயங்கள் பற்றி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களைத் தெளிவுபடுத்தினார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முதலாவது செயலாளர் அன்ரூ பிரைஸ் (Andrew Price), ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.