ஜனாசா நல்லடக்கம் விவகாரம் – மக்கள் இன்றும் போராட்டம்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,  இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து நேற்று போராட்டம் முன்னெடுத்த நிலையில், இன்று இரணைதீவு பிரதான இறங்குதுறை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்குக் குழிகள் தோண்டப்பட்ட பகுதி போன்வற்றில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல தரப்பினருக்கு இரணை தீவு மக்களால் மகஜர் கையளிக்கப்பட்ட போதும் இதுவரை சடலங்களை அடக்கம் செய்வதற்கான மாற்று இடம் குறித்து தெரிவுசெய்யப்படவோ அல்லது இரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளை இடைநிறுத்தப்படவோ இல்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், இரணைதீவுப் பகுதிக்குச் செல்லும் மக்களிடம் கடற்படையினர் அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாகவும், தீவுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தீவுக்குச் செல்வதற்கு முன்பு அடையாள அட்டையை கடற்படையினரிடம் ஒப்படைத்துச் செல்லவேண்டும் என பணிக்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.