சோமாலியாவின் தலைநகரில் இன்று (29) காலை இடம்பெற்ற வாகனக் குண்டு வெடிப்பில் 79 பேர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள காலை நேரத்தில் தலைநகர் மொகடிசுவில் இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் 149 பேர் காயமடைந்துள்ளதாகவும் மிகவும் சக்திவாய்ந்த இந்த குண்டு வெடிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் சக்தியை ஒத்தது எனவும் உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஏறத்தாள 500 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
தாக்குதலாளிகள் படையினரின் சோதனை நிலையத்தை நோக்கி குண்டுகள் பொருத்திய வாகனத்தை செலுத்தி வந்ததாகவும், இந்த தாக்குதலில் பெருமளவான பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் அரசின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்ருந்தனர். அந்தத் தாக்குதலுக்கு அல் சபாப் என்ற அமைப்பு உரிமை கோரியிருந்தது. இந்த அமைப்பு 3 தாக்குதல்களை கடந்த நவம்பர் மாதம் நடத்தியிருந்தது. அதில் 52 பேர் கொல்லப்பட்டும் 100 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துமிருந்தனர்.