சுழிபுரம் இரட்டைக்கொலை விவகாரம்- பொலிஸாரின் செயற்பாட்டில் அதிருப்தி!

வலி.மேற்கு பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதில் வட்டுக்கோட்டை பொலிஸார் அசமந்தப் போக்கை கடைப்பிடிப்பது தொடர்பாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுசெல்வது என வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுழிபுரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இரட்டைப் படுகொலையை தடுத்து நிறுத்த முடியுமாக இருந்த போதிலும் பொலிஸார் உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்லாத காரணத்தாலேயே இந்தக் கொலை நடைபெற்றுள்ளது எனவும் சபையில் தெரிவிக்கப்பட்டது. பொலிஸாரின் இந்தச் செயற்பாட்டுக்கு சபையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

வலி.மேற்கு பிரதேச சபையின் 33 ஆவது அமர்வு இன்று (16) தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது சுழிபுரம் – குடாக்கனையில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பாக உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இப்பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாலேயே அடிக்கடி இவ்வாறான படுகொலைகள் இங்கு நடைபெறுகின்றன என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கசிப்பு உற்பத்தி செய்பவர்களுக்கும் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன எனவும் இதனாலேயே இங்கு கசிப்பு உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேற்படி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி செய்பவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கடந்த வருடம் கையளிக்கப்பட்டது எனவும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் சபையில் கருத்து முன்வைக்கப்பட்டது.

கடந்த வெள்ளி நள்ளிரவு மேற்படி படுகொலை நடைபெற்ற இடத்தில் மாலை வேளையே ஒருவர் தாக்கப்பட்டார். பின்னர் இரவு 10 மணியளவில் கொலையாளிகள் வாள்களுடன் நிற்கின்றனர் என்ற விடயம் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தொலைபேசியில் பல தடவைகள் அறிவிக்கப்பட்டது. எனினும் அவர்கள் அங்கு செல்லவில்லை.

கொலை இடம்பெற்ற பின்னர் இராணுவத்தினர் அங்கு சென்று உடல்களை தமது வாகனத்தில் ஏற்றிச் சென்ற பின்னரே பொலிஸார் சென்றனர். எனவேஇ குறித்த படுகொலைக்கு பொலிஸாரும் உடந்தையாக இருந்தனரா என்ற கேள்வி எழுகின்றது எனவும் சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

சுழிபுரத்தில் இடம்பெறும் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தி அப்பகுதியிலும் அயல் பிரதேசங்களிலும் வசிக்கும் பொதுமக்களை பாதுகாக்குமாறும் வட்டுக்கோட்டை பொலிஸாரின் செயற்றிறன் அற்ற தன்மை குறித்தும் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவது என சபையில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

கவனயீர்ப்பு போராட்டம்

இதேவேளை, மேற்படி இரட்டைப் படுகொலை, குடாக்கனை கசிப்பு உற்பத்தி, பொலிஸாரின் நடவடிக்கைகள் போன்றவற்றைக் கண்டித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சுழிபுரம் சந்தியில் அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவது எனவும் சபையில் தீர்மானிக்கப்பட்டது.