சுமந்திரன் விடயமாக சம்பந்தனுடன் விரைவில் பேசுவோம்: செல்வம்

தனிப்பட்ட சுமந்திரனை நாம் விமர்சிக்கவில்லை. ஆயுதப் போராட்டம் தொடர்பாகச் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களையே நாம் கண்டித்தோம். சுமந்திரனின் கருத் துக்களை நன்றாக விளங்கிக்கொண்டே கருத்துக்களைத் தெரிவித்தோம். சில சிறுவர்கள் சிங்களம் தெரியாமல் நாம் கருத்து சொன்னோம் எனக் கருத் திட்டு வருகிறார்கள். சுமந்திரன் விடயமாக விரை வில் சம்பந்தனுடன் பேசவுள்ளோம்.

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன். தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் கிறிஸ்ரி குகராஜாவின் 21ஆவது நினைவுதினம் வவுனியாவில் அமைந்துள்ள அவரது நினைவு தூபியடியில் நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் –

“நாம் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதனைச் சந்திப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். மக்களின் ஜனநாயக முறையிலான வாக்களிப்பு உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். மக்கள் தற்போது அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கொரோனா தொற்று நோய் அதிகரித்துவரும் நிலையில் மக்களின் வாக்குரிமையை ஜனநாயக மரபு மீறலைக் கொண்டு செயற்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே சூழலுக்கு ஏற்ற வகையில் தேர்தலை நடத்தவேண்டும் என்பதை நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். மக்கள் கூட்டமைப்பை நிச்சயம் ஆதரிப்பார்கள். அவர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய நிலைமையை நாம் ஏற்படுத்த வேண்டும்.

எங்கள் மக்களின் விடுதலைதான் எமது பிரதான நோக்கம். அதற்காகவே துப்பாக்கி ஏந்தினோம். அது புனிதமானதென்பதை அனைவரும் ஒத்துக்கொள்ளவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் சுமந்திரன் தொடர்பாக எதிர்மாறான கருத்துக்களை நாம் இதுவரை கூறவில்லை. எனினும் முக்கிய பதவியில் இருந்து கொண்டு விடுதலைப் போராட்டத்தை ஏற்கவில்லை என்று சொல்வது அவரது தனிப்பட்ட கருத்து என்பதை ஏற்க முடியாது. ஆயுதப் போராட்ட விடயத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் கருத்துக்கள் அத்தனையும் ஒன்றாக இருக்கவேண்டும்.

இது விடயம் தொடர்பாகச் சம்பந்தன் ஐயாவைச் சந்தித்து உரையாட இருக்கின்றோம். அத்துடன் அவர் தெரிவித்த கருத்துக்கள் பல ஊடகங்களில் சிங்களமொழி பெயர்ப்பு வந்திருக்கின்றது. முன்னாள் வடக்கு மாகாண அவைத் தலைவர் சிவஞானம் அந்த விடயம் தொடர்பாகச் சரியான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் சொல்லப்பட்ட விடயங்கள் அத்தனையும் உண்மை. சிங்களம் தெரியாது என்பதற்காக கருத்துக்களை மாறிச் சொல்ல வேண்டிய நிலை எமக்கில்லை. அப்பிடி சொல்வது எங்களை மலினப்படுத்துவது போல தெரிகின்றது” என்றார்.