Tamil News
Home உலகச் செய்திகள் சீன அதிபர் வருகையை ஒட்டி சென்னை, காஞ்சிபுரத்தில் பாதுகாப்பிற்கு 15000 பொலிசார்

சீன அதிபர் வருகையை ஒட்டி சென்னை, காஞ்சிபுரத்தில் பாதுகாப்பிற்கு 15000 பொலிசார்

தமிழகத்தில் 11, 12ஆம் திகதிகளில் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜிஜின்பிங் இடையேயான சந்திப்பு, நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதால் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் எதிர்வரும் 11ஆம் திகதி முதன்முறையாக சென்னை வருகின்றார். 2 நாட்கள் அரசுமுறைப் பணணமாக வரும் அவர் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கிடையேயான ராஜிய உறவு, பாதுகாப்பு, வர்த்தகம் உட்பட பல அம்சங்கள் அடங்கியுள்ளன. பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனக் கூறப்படுகின்றது.

பிரதமர் மோடி ஒருநாள் முன்னதாகவே சென்னை வந்துவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன அதிபரின் 11ஆம் திகதி சென்னை வருகின்றார். அவர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் மவுண்ட் துணை ஆணையர் பிரபாகர் தலைமையில் 3 உதவி ஆணையாளர்கள் மற்றும் 7 இன்ஸ்பெக்டர்கள், 21 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 120 பொலிசார் பாதுகாப்புப் பணியில் இரப்பர். இது தவிர மத்திய அரசின் பாதுகாப்பும் இருக்கும்.

இது தவிர வரும் வழியில் மூன்று துணை ஆணையர்கள் தலைமையில் மூன்று கட்டங்களாக பாதுகாப்பு, 6 உதவி ஆணையாளர்கள், 16 ஆய்வாளர்கள், 48 உதவி ஆய்வாளர்கள், 300 பொலிசார் பாதுகாப்புப் பணியில் இருப்பர். அவர் தங்கும் நட்சத்திர விடுதிக்கும் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கு சேலம் டிஐஜி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அவருக்குக் கீழ் 3 துணை ஆணையாளர்கள் 4 உதவி ஆணையாளர்கள், 12 ஆய்வாளர்கள் 36 உதவி ஆய்வாளர்கள், மற்றும் 300இற்கும் மேற்பட்ட பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஐடிசி சோழா விடுதியில் இருந்து முட்டுக்காடு வரை சென்னை பொலிசாருக்கு சாலை வழியாக பந்தோபஸ்து போடப்பட்டுள்ளது. இந்த மார்க்கத்தை 8 பிரிவுகளாக பிரித்து 8 துணை ஆணையர்கள், 2 கூடுதல் துணை ஆணையர்கள், 30 உதவி ஆணையர்கள், 90 ஆய்வாளர்கள், 270 உதவி ஆய்வாளர்கள் என ஆயிரக் கணக்கான பொலிசார் வழியெங்கும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் சீன அதிபர் தங்கும் நட்சத்திர விடுதியில் தொடங்கி முட்டுக்காடு வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நான்கு டிஐஜிக்கள் தலைமையில் 16 துணை ஆணையர்கள் கீழ் பாதுகாப்புப் பணி, சோதனைப் பணி, பந்தோபஸ்து பணி என மொத்தம் சென்னைப் பொலிசார் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

சீன அதிபர் விமான நிலையத்திலிருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு செல்லும் சாலைகள், மற்றும் நட்சத்திர விடுதியிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலைகள் 8 மையங்களாக பிரித்து துணை ஆணையர்கள் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கூடுதல் ஆணையர் தெற்கு பிரேமானந்த் சிங்ஹா ஒருங்கிணைப்பார்.

காவல்துறையினர் திட்டமிட்டபடி சீன அதிபர் செல்லும் பயண பாதையில் பிரச்சினை ஏற்பட்டால் மாற்று பாதையில் அழைத்து செல்வதற்கு பொலிசார் திட்டமிட்டு அந்த சாலைகளிலும் துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் கிண்டி நட்சத்திர விடுதியிலிருந்து மாமல்லபுரம் வரையுள்ள பகுதிகளில் உயர் கட்டிடங்களிலும் காவலர்கள் அமர்த்தப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிசார் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

 

 

 

Exit mobile version