சீனாவில் பறவைக் காய்ச்சல் – மனித குலத்திற்கு மீண்டும் ஆபத்தா?

உலகிலேயே   முதல்முறையாக சீனாவைச் சேர்ந்த 41 வயதான ஒருவருக்கு மிகவும் அரிதான பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

மேலும் H10N3 என்று அறியப்படும் இவ்வகைப் பறவைக் காய்ச்சல் தொற்று மனிதர்களிடமிருந்து மற்றொரு மனிதருக்குப் எளிதாகப் பரவி விடாது என்றும் கருதப்படுகிறது.

உலகில் இதுவரை H10N3 தொற்று மனிதர்களுக்கு ஏற்பட்டிருப்பதாக தகவல் இல்லை. இது கோழிகளிடம் இருந்து மனிதனுக்குப் பரவும் மிகவும் அரிதான நிகழ்வு. பெரிய அளவில் இது பரவுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு,” என தேசிய சுகாதார ஆணையம் கூறியிருப்பதாக குளோபல் டைம்ஸ் இதழ் கூறுகிறது.

அதே நேரம் சீனாவின் சுகாதார ஆணையம்  வெளியிட்ட தகவலில், “H10N3 என்பது முழுமையான நோய்க்கிருமி என்று கூற முடியாது. கோழிகளில் இது மிகத் தீவிரமான காய்ச்சலையோ வேறு நோய்களையோ ஏற்படுத்தாது” என்று கூறியுள்ளது.

இப்போதைய நிலையில் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்தக் கிருமி பரவுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

“பறவைக் காய்ச்சல் வைரஸ்கள் கோழிகளில் இருக்கும்வரை மனிதர்களுக்கு அந்தத் தொற்று ஏற்படுவதில் வியப்பில்லை. இன்ஃப்ளூயன்ஸா பெருந்தொற்றுக்கான ஆபத்து இருப்பதற்கான நினைவூட்டல் இது,” என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

கடந்த பிப்ரவரியில் மனிதர்களிடம் H5N8 வகை பறவைக் காய்ச்சல் கிருமி இருப்பதை ரஷ்யா முதல்முறையாகக் கண்டறிந்தது.

பறவைக் காய்ச்சல் தொற்று மனிதர்களுக்கு ஏற்படுவது மிகவும் அரிது. 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் H7N9 என்ற வகையான பறவைக் காய்ச்சல் தாக்கியதில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு பெரிய எண்ணிக்கையில் தொற்று கண்டறியப்படவில்லை.