சீனாவின் தேசிய தினத்தில் ஹொங்கொங்கில் மீண்டும் வெடித்த போராட்டம்

சீனப் புரட்சியின் 70ஆவது ஆண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி மற்றும் கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், ஹொங்கொங்கில் போராட்டங்கள் நடந்து கொண்டிருப்பதையும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அங்கிருந்து வெளியாகும் படங்கள் காண்பிக்கின்றன.

ஹொங்கொங் போராட்டங்களில் பங்கெடுத்த ஒருவரின் மீது பொலிசாரின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாக ஹொங்கொங் பொலிஸ் செய்தி ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விரைவில் பொலிசார் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஜுன் மாதம் முதல் ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் சூழலில், முதன்முறையாக போராட்டக்காரர் ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பய்ந்தது இதுவே முதல்முறையாகும்.

ஹொங்கொங்கின் அட்மிரால்டி பகுதியில் போராட்டங்களை கட்டுப்படுத்த பொலிசார் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்துவதாக அறிய முடிகின்றது.

இந்த போராட்டங்களில் காயமடைந்த 18 வயது முதல் 52 வயதுடைய 15பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் அறிய முடிகின்றது. இதில் ஒருவர் மிகவும் தீவிர காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது.

சீனப் புரட்சியின் 70ஆவது அண்டு விழாவை எதிர்மறையாக எதுவும் நடக்காமல் கொண்டாட சீனா நினைத்தது.

ஆனால், ஹொங்கொங் அரசு சமீபத்தில் நிறைவேற்ற முயன்ற குற்றப் பின்னணி உடையவர்களை சீனாவிற்கு நாடு கடத்தும் சட்ட மசோதா, ஹொங்கொங் அரசு மற்றும் சீனாவிற்கு எதிரான போராட்டங்களைத் தூண்டியது. அதனால் ஹொங்கொங் அரசு அந்த சட்ட வரைவை விலக்கிக் கொண்டது.

hong cong2 சீனாவின் தேசிய தினத்தில் ஹொங்கொங்கில் மீண்டும் வெடித்த போராட்டம்இன்று காலை பெய்ஜிங்கில் சீன அரசு கொண்டாடிக்கொண்டிருந்த சமயத்தில் ஹொங்கொங்கில் சீன எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன.

1898 முதல் பிரிட்டனால் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்த ஹொங்கொங்,  1997இல் சீனாவுடன் இணைந்தது. எனினும், ஒரு நாடு இரு  அமைப்பு முறை என்னும் கொள்கையின்படி, சட்டம் இயற்றல், நிர்வாகம் உள்ளிட்டவற்றில் ஹொங்கொங் தன்னாட்சி அதிகாரங்களைப் பெற்றுள்ளது.

இந்தத் தன்னாட்சி உரிமை 2047இல் முடிவிற்கு வரவுள்ளது. எனினும், இது எப்போதும் தொடர வேண்டும் என்றும், ஹொங்கொங் இன்னொரு சீன நகரத்தைப் போல் ஆகிவிடக் கூடாது என்றும் அந்த நகர மக்கள் விரும்புகின்றனர்.