சீனப் பாணியில் “கண்காணிப்பு மிகுந்த” அரசை அமைப்பதற்கு அடித்தளம்; மங்கள எச்சரிக்கை

பௌத்த பிக்குகளின் எதிர்ப்பையும் மீறி நீதியமைச்ச ராக அலி சப்ரி நியமிக்கப்பட்டமைக்காகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைப் பாராட்டியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்பு அமைச்சின் கீழ் “உள்நாட்டு அலுவல்கள்” என்ற விடயதானம் கொண்டுவரப்பட்டமை சீனப் பாணியிலான “கண்காணிப்பு மிகுந்த” அரசொன்றை அமைப்பதற்கு அடித்தளமிடப்படுவதையே காண்பிக்கின்றது என்றும் எச்சரித்திருக்கிறார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மங்கள சமரவீர இட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

“பௌத்த பிக்குகளின் எதிர்ப்பையும் மீறி நீதியமைச்சராக அலி சப்ரியை நியமித்தமைக்காக பிரதமரைப் பாராட்டுகின்றேன். எஞ்சிய அமைச்சரவை நியமனங்கள் அத்தனை வரவேற்கத்தக்கவையாக இல்லை என்பதுடன் பெரும்பாலும் இராஜாங்க அமைச்சர்களுக்குப் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ள விடயதானங்கள் பெரும் நகைப்பிற்குரியதாக இருக்கின்றது.

மேலும் பாதுகாப்பு அமைச்சுக்குக் கீழான விடயதானங்களில் ஒன்றாக உள்நாட்டு அலுவல்களை உள்ளடக்கி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலானது, சீனப்பாணியிலான கண்காணிப்பு மிகுந்த அரசு ஒன்றை அமைப்பதற்கான முதல் அடித்தளமாகவே அமைந்திருக்கிறது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.