சிறைச்சாலை அதிகாரியை கைது செய்ய பிடியாணை

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது சிறைச்சாலையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரியாக இருந்த இமதுவகே இந்திக சம்பத் என்பவரை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலப்பகுதியில் 8 கைதிகளை படுகொலை செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போதே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 2012ஆம் ஆண்டு நவம்பர் 09ஆம் திகதி இடம்பெற்ற மோதல் நிலையை கட்டுப்படுத்த 8 கைதிகளை சுட்டு படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ, முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா, சிறைச்சாலை புலனாய்வு அதிகாரி இமதுவகே இந்திக சம்பத் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறீலங்காவில் சிங்களக் கைதிகள் தமிழ் கைதிகள் மீது காலம் காலமாக சிறை அதிகாரிகளின் உதவிகளுடன் தாக்குதல்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1983 ஆம் ஆண்டும் வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இனப்படுகொலையில் 37 தமிழ் கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

ஆனால் சிறுபான்மை மக்கள் கொல்லப்படும் போது சிறீலங்கா அரசு அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனல் தற்போது அனைத்துலக அழுத்தங்களை திசை திருப்ப சிறீலங்கா அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.