சிறீலங்கா விமானப்படையில் பெண் விமான ஓட்டிகள் – இந்தியா வாழ்த்து

சிறீலங்கா விமானப்படையில் இரண்டு பெண் விமான ஓட்டிகள் நியமனம் செய்யப்பட்டமைக்கு இந்தியா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய தூதரகம் சார்பில் இந்த வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வாழ்த்துச் செய்தியில், “நம் அண்டை நாடான சிறீலங்கா விமானப்படை வரலாற்றில் முதன்முறையாக இரு பெண் விமான ஓட்டிகள் நியமிக்கப்பட்டமை இந்தியாவிற்கு பெருமை, மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

இவர்கள் இருவரும் ஐதரபாத்தில் உள்ள இந்திய விமானப்படைப் பயிற்சி மையத்தில் ஓராண்டுகள் விமான ஓட்டிகளாக பயிற்சி பெற்றவர்கள். இந்தியாவில் வெளிநாட்டு இராணுவத்தினருக்கு அளிக்கப்படும் பயிற்சியில் 50 சதவீதத்திற்கு மேல் பங்கேற்பவர்கள் சிறீலங்காவைச் சேர்ந்தவர்கள்.  இது இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குணரத்ன, ஆர்.டி.வீரவர்த்தன ஆகிய இரு பெண் விமான ஓட்டிகள் கடந்த 16ஆம் திகதி சிறீலங்கா விமானப்படையில் பெண் விமான ஓட்டிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.