சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற திட்டத்தில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவருக்கான தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என்றும், தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு அணியில் இணைந்து செயற்படவேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அண்மையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இறுதி முடிவுகள் எட்டப்படாவிட்டாலும், தொடர்ந்து சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழ மாணவர்களின் முயற்சிக்கு தமது ஆதரவுகளை தெரிவிப்பதாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.