சிறீலங்காவிடம் ஆக்க பூர்வமான பொறுப்புக் கூறலை எதிர்பார்க்க முடியாது – ஜோன் பிஷர்

மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கையை சிறீலங்கா நிராகரித்துள்ள நிலையில்,  இறுதிப்போரில் இடம்பெற்றதாக கூறப்பட்ட போர் குற்றங்களுக்கும் பாராதுாரமான மீறல்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்கவோ அல்லது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலோ சிறீலங்காவுக்கு எவ்வித தேவையும் காணப்படவில்லை என்பது தெளிவாக உள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் உரையை சுட்டிக்காட்டி, மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் தனது ட்விட்டர் தளத்தில்,

“ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் சிறீலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சர்வதேசக் குற்றங்களை வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்த்தன மறுத்துள்ளார்.

இதுவரை காலமும் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளிலிருந்து அவர் பின்வாங்கியுள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கையை வெறும் “ பிரசார நடவடிக்கை” என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு ஒரு நிலைப்பாட்டை கொண்டுள்ள சிறீலங்காவிடம் ஆக்க பூர்வமான பொறுப்புக் கூறலை எதிர்பார்க்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.” என்று பதிவிட்டுள்ளார்.