சிரியா போர்-‘அன்று அகதி, இன்று கனடிய ராப் பாடகர்’

அலி கஹர்ஸா, பத்தாண்டு முன்பு சிரியாவில் மகிழ்ச்சியாக வளர்ந்த கொண்டிருந்த குழந்தை. இன்று அவர் MC AK என்ற பெயரில் கனடிய ராப் பாடகராக அறியப்படுகிறார்.

இந்த இடைப்பட்ட பத்தாண்டுகளில் நடந்தது என்ன? அவர் கனடா வந்தது எப்படி? என்பதற்கு முழு முதல் காரணம் ‘சிரியாவில் ஏற்பட்ட போர் சூழல்.’

கடந்த 2012ம் ஆண்டு சிரியாவிலிருந்து குடும்பத்துடன் வெளியேறிய கஹர்ஸாவுக்கு அப்போது வயது 14. மலேசியாவில் தஞ்சமடைந்த இவர்கள், அங்கு பாதுகாப்பாக உணரவில்லை. இதனால் கஹர்ஸாவும் அவரது தந்தையும் அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

படகு வழியாக வருபவர்களுக்கு அவுஸ்திரேலிய எல்லைகள் மூடப்பட்டுள்ளது என்ற செய்திகளை தவிர்த்த கஹர்ஸாவும் அவரது தந்தையும் கடல் பயணத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த கடல் பயணம் நவுருவில் செயல்பட்ட அவுஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாமில் அவர்களை அடைத்திருக்கிறது. இங்கு அடிப்படை வசதிகளற்ற மோசமான சிறை அனுபவத்தை எதிர்கொண்ட இவர்களுக்கு இறுதியாக 2015ம் ஆண்டு கனடாவில் தஞ்சம் வழங்கப்பட்டிருக்கிறது. பின்னர் ஐ.நா.வின் உதவியுடன் அவர்களது குடும்பத்துடன் இணையும் வாய்ப்பும் இவர்களுக்கு கிடைத்திருக்கிறது.

இந்த சூழலில், இன்றும் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து வருத்தம் கொள்ளும் கஹர்ஸா, அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என விருப்பம் கொண்டிருக்கிறார்.