“சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலில் தலையிட மாட்டோம்” – அமெரிக்கா

வடமேற்கு சிரியா பகுதியில் துருக்கி இராணுவம் குர்து இன கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தவுள்ள தாக்குதலில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அமெரிக்கா கூறியுள்ளது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த அனைத்து இஸ்லாமிய அரசு குழுக்களின் கைதிகளை பாதுகாக்கும் பொறுப்பை துருக்கி ஏற்றுக் கொண்டது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தாங்கள் பயங்கரவாதிகள் எனக் கருதும் குர்து இன கிளர்ச்சியாளர்களை தங்கள் எல்லை பகுதியில் இருந்து நீக்க துருக்கி நினைக்கின்றது.

அத்தோடு இரண்டு மில்லியன் சிரிய அகதிகளை, எல்லையை ஒட்டிய ஒரு பாதுகாப்புப் பகுதியில் தங்க வைக்க துருக்கி நினைக்கின்றது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்துவான் ஆகியோர் இது குறித்து பேசியுள்ளனர்.

“துருக்கி தங்களின் நீண்ட நாள் திட்டப்படி சிரியாவின் வடக்கு பகுதியில் தாக்குதல் நடத்தவுள்ளது.

அமெரிக்கப் படைகள் இந்தத் தாக்குதலில் ஈடுபடவோ அல்லது இதற்கு ஆதரவு தெரிவிக்கவோ இல்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் ஆக்கிரமிப்பு பிராந்தியத்தின் முக்கிய பகுதியை வீழ்த்தியதன் பின் தங்கள் படைகள் அந்தப் பகுதியில் இருக்காது.” என அமெரிக்கா கூறுகின்றது.

“மேலும் இரண்டு வருடங்களாக கைது செய்யப்பட்ட இஸ்லாமிய அரசு குழுவின் கைதிகளை துருக்கி பொறுப்பேற்றுக் கொண்டது.

பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர்கள் நாட்டிலிருந்து வந்த ஐ.எஸ் போராளிகளை திரும்பப் பெறுமாறு நாங்கள் கேட்ட போது, அந்த நாடுகள் அதை மறுத்து விட்டது.

எங்களுக்கு அதிகம் செலவாகும் என்பதால், நாங்கள் அவர்களை நீண்ட காலம் வைத்திருக்க மாட்டோம் என அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.

துருக்கி பிரதமர் தாக்குதலைப் பற்றி அறிவித்த அடுத்த நாளே அமெரிக்க அரசு இவ்வாறு கூறியுள்ளது.

இந்த தொலைபேசி உரையாடலின் போது துருக்கி அதிபர், சிரியாவுடன் எல்லைப் பகுதியில் சேர்ந்து அமைக்கும் சிரியா அகதிகளுக்கான பாதுகாப்புப் பகுதி மண்டலம் குறித்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்த பாதுகாப்பு மண்டலம் அமைப்பது நேட்டோ நாடுகளால் ஓகஸ்ட் மாதம் ஒப்புக் கொண்ட ஒன்றாகும்.

துருக்கி பயங்கரவாதிகள் என குறிப்பிடும் குர்து இனக் கிளர்ச்சியாளர்களின் அமைப்பான ஒய்பிஜி அமைப்பிடமிருந்து முழுமையாக விடுபட்ட பகுதியாக இது இருக்க வேண்டும் என்று எண்ணியது.

பெரும்பாலும் சிரியாவின் ஜனநாயக படை மற்றும் அமெரிக்காவின் ஆதரவு படையைக் கொண்டதே இந்த ஒய்பிஜி படை ஆகும்.

இந்த பாதுகாப்பு பகுதிக்குள் இரண்டு மில்லியன் அகதிகளை அனுப்ப விரும்பியது துருக்கி, இப்போது துருக்கியில் 3.6 மில்லியன் மக்கள் அகதிகளாக உள்ளனர்.