சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாகப் பொதுத் தேர்தல்? ஆளுங்கட்சி தீவிரமாக ஆராய்வு

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறிகள் அரசியல் களத்தில் பிரகாசமாக தென்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் கடந்த புதன் நடைபெற்ற ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி ஓராண்டு பூர்த்தியாகின்றது. இந்நிலையில் ஏப்ரல் இறுதி வாரத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படுமானால் அது ஏதேனும் ஒரு விதத்தில் தமது கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத் தும் என்பதால் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் பச்சைக்கொடி காட்டியுள்ளது என தெரியவருகின்றது.

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின்பிரகாரம் நான்கரை ஆண்டுகளுக்கு பின்னரே நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு இருக்கின்றது. எனினும், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானமொன்றை நிறைவேற்றினால் முன்கூட்டியே கலைக்க முடியும் என்றும், இதன்பிரகாரம் அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இம்மாத இறுதிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் எனவும் அரசியல் களத்தில் பேசப்படுகின்றது.