சிறிலங்கா இராணுவத்தினரால் ஆண்டு தோறும் நடத்தப்படும் கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் 29.08 ஆரம்பமானது. இக்கருத்தரங்கை அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் புறக்கணித்தனர்.
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். அதைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா வரவேற்புரை நிகழ்த்த, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கொட்டேகொட சிறப்புரை ஆற்றினார்.
இதைத் தொடர்ந்து கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்த நிபுணர்களும், உள்நாட்டு இராஜதந்திரிகளும் உரையாற்றினர். இக்கருத்தரங்கில் 42 நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 800 பேர் கலந்து கொண்டதாக சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவித்தனர்.
இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எதிர்த்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதனாலேயே சவேந்திர சில்வா தலைமையில் நடைபெறும் இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கில் இவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.