Tamil News
Home செய்திகள் சர்வதேச நீதி கோரிய யாழ் பேரணிக்கு ரெலோ இளைஞர் அணி ஆதரவு

சர்வதேச நீதி கோரிய யாழ் பேரணிக்கு ரெலோ இளைஞர் அணி ஆதரவு

நாளை (17/03/2021) யாழ் கிட்டு பூங்காவில் இருந்து நல்லூர் பின் வீதி வரை நடைபெறவுள்ள சர்வதேச நீதி கோரிய பேரணிக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலில்,

“இறுதிப் போரில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு ஐ நா மனிதவுரிமைப் பேரவையில் பரிகார நீதி கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்பதை ஐ நா மனிதவுரிமைப் பேரவையின் ஆணையாளரின் 12/02/2021 அறிக்கை தெட்டத் தெளிவாக கூறியுள்ளது.

அத்துடன் சர்வதேச நீதிப் பொறிமுறைகளின் ஊடாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையும் ஆணையாளர் உறுதிபடக் கூறியுள்ளார்.

இதன் பிற்பாடு பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு உறுதியாக ஒரே நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவு படுத்த இப்படியான ஐனநாயகப் போராட்டங்கள் அவசியமானதுடன் அதனை அனைத்து தரப்பினரும் ஆதரித்து நீதி வேண்டிய  குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும்.

இந்த நிலைப்பாட்டில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் உறுதியாக பல முனைகளிலும் பணியாற்றி வருவதுடன் இனத்துக்கான நீதி பலவீனமடைவதை எந்த வகையிலும் அனுமதிக்கப் போவதில்லை.

அந்தவகையில் நடைபெறவுள்ள  பேரணிக்கும் இளைஞர் அணி தமது முழுமையான ஆதரவை வழங்குவதுடன் தமிழ்த் தேசிய சக்திகள் அனைவரையும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்“. என்றுள்ளது.

Exit mobile version