சர்ச்சைக்குரிய பகுதியில் சீனாவின் புதிய கிராமம் ?

பூட்டான் நாட்டிற்கு அருகில் சீனா உருவாக்கியுள்ள புதிய எல்லை கிராமம்,தமது எல்லையில் இருப்பதாக அந்நாட்டு ஊடகம் கூறியுள்ள நிலையில், அக் கிராமம், இரு நாடுகளுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய பகுதியில் அமைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூட்டான் அதன் எல்லையாக கருதும் பகுதியில் இருந்து,   சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே இந்த புதிய கிராமம் உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில்,பாங்டா என்று பெயரிடப்பட்ட இந்த புதிய கிராமம் கட்டப்பட்டு, செப்டம்பரில் மக்கள் அங்கு குடியேறியிருக்கிறார்கள் என்று சீனாவின் ‘குளோபல் டைம்ஸ்’ இணைய தளம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், இந்தியாவிற்கான பூட்டான் தூதர் வெட்சோப் நம்கீல், “பூட்டானின் எல்லைக்குள் சீன கிராமம் இல்லை.” என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால் சீன அரசு, தென் சீனக் கடல் தீவுகளில் செய்தது போலவே, கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய பகுதிகளில், சீன மக்களை குடியேற்றுவதன் மூலம், அந்த பகுதிக்கான உரிமையை பறிக்கப்பார்கிறது  என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் சீனாவின் வரைபடங்களின்படி, இந்த கிராமம் சீனாவின் எல்லைக்குள் உள்ளது. ஆனால் சீனாவை பொறுத்தவரை அதன் எல்லை என்பது, இந்தியா மற்றும் பூட்டானின் எல்லைகளை கடந்து, சில பகுதிகளை உள்ளடக்கியது.

அதே நேரம் இந்த கிராமம், டோக்லாம் பீடபூமி பகுதியில், இந்தியா-பூட்டான்-சீனா முக்கோண எல்லை பகுதியின் கிழக்கே உள்ளது என்று இந்தியாவின் முதன்மை செய்தி நிறுவனங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தீர்க்கப்படாமல் இருக்கும் சீனா-பூட்டான் எல்லை பிரச்சனை குறித்து, இந்தியாவை குற்றம் சாட்டியுள்ளனர்  சீன வல்லுநர்கள்.

இது குறித்து   ’குளோபல் டைம்ஸிடம்’ ஷின்ஹூவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் துறையின் இயக்குனர் கியான் ஃபெங் ,“சீனாவுக்கும் பூட்டானுக்கும் இடையிலான எல்லை பிரச்சனை மிகச் சிறியது, ஆனால் இந்தியாவின் தலையீடு காரணமாக பிரச்சனை சரி செய்யப்படவில்லை.” என்று  தெரிவித்துள்ளார்.