Tamil News
Home செய்திகள் சமூகத்தொற்று தொடர்பில் விழிப்பாக செயற்படுங்கள்- யாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு

சமூகத்தொற்று தொடர்பில் விழிப்பாக செயற்படுங்கள்- யாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு

யாழ் மாவட்ட மக்கள் சமூகத்தொற்று தொடர்பில் விழிப்பாக செயற்படுங்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவசர அறிவிப்பு விடுத்துள்ளார்.

தற்போது நாட்டில் உள்ள  கோவிட் 19 நிலைமை தொடர்பில் யாழ் மாவட்ட மக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் விடுத்துள்ள அவசர செய்திக் குறிப்பில்,

“கம்பஹா மாவட்ட மினுவாங்கொட திவிலபிட்டிய பகுதிகளில் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுக்கு கொரோணா தொற்று இனங் காணப்பட்டதையடுத்து நாடு பூராகவும் சுகாதார அமைச்சு, கொரோனா தடுப்பு செயலணியினால் கொரோனா தொற்றினை தடுக்கும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் யாழ் மாவட்ட பொதுமக்கள் அவதானமாக செயற்பட்டு தங்களை தாங்களாகவே பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும். அதனடிப்படையில் யாழ்மாவட்ட மக்கள் அவசியமற்ற நடமாட்டங்களை தவித்து வீடுகளில் இருப்பதோடு வீதிகளில் பயணிக்கும் போது மாஸ்க் அணிந்து மற்றும் சமூக இடைவெளியினை பேணுவதன் மூலம் பொதுமக்கள் கொரோணா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சமூகத்தொற்று எந்த உருவில் எங்கே எப்போது தொற்றும் என யாருக்கும் தெரியாது. எனவே கொரோணா தொற்றிலிருந்து யாழ் மாவட்ட மக்கள் தங்களை பாதுகாப்பதற்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

மேலும் யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் மினுவாங்கொட பகுதியில் இருந்து வருகை தந்தோர் தொடர்பில் சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் கொரோனா தொற்று ஏற்படாவண்ணம் தங்களை சமூகத் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு உரிய முன்னேற்பாடுகளை பொதுமக்கள் தாங்களாகவே முன்னெடுக்கவேண்டும்.

பொது இடங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். அலுவலகங்கள் வழமைபோல் செயற்படும் எனினும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தங்களை சமூக தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். இவ்விடயங்களை யாழ் மாவட்ட மக்கள் அனைவரும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்” என அரச அதிபர் கோரியுள்ளார்.

Exit mobile version