சட்ட விரோத மதுபான விற்பனை – பெண்கள் உட்பட நால்வர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் நூதனமான முறையில் இயங்கிவந்த சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவான மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இந்த சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் இயங்கிவந்த நிலையில் ,பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது.

இந்நிலையில்,கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நளின் அசோக குணவர்த்தன தலைமையிலான பொலிஸார் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

IMG 6451 சட்ட விரோத மதுபான விற்பனை - பெண்கள் உட்பட நால்வர் கைது

இதன்கீழ் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 170மில்லி லீற்றர் அளவுகொண்ட 750மதுபான போத்தல்கள்  மீட்கப்பட்டதுடன் இது தொடர்பில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நளின் அசோக குணவர்த்தன தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.