சட்டவிரோதமாக கடல் வழி மூலம் அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 30 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் சிலாபம் − இரணமடு பகுதியில் வைத்தே குறித்த 30 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப் பட்டவர்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது.
இக்குழு படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லத் தயாராகி வந்தமை முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக சிலாபம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.