சஜித் எதைத் தருவார் என்று முதலில் அவரின் தேர்தல் அறிக்கையைப் பரிசீலித்த பின்னர் முடிவெடுப்போம் – சி.வி.விக்னேஸ்வரன்

“கோத்தபயா வென்றால் தமிழர்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போய்விடுவார்கள் என்று தமிழர்கள் அஞ்சுவது புரிகின்றது. அவ்வாறு அவர் நடந்து கொள்ள மாட்டார் என்றே தோன்றுகின்றது.

அந்த அளவிற்கு உலக நாடுகள் அவரை உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர் வந்தால் சர்வதேச ரீதியாக எமக்கு நன்மையே அல்லாது தீமையில்லை” என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உங்கள் கருத்துப்படி ஜனாதிபத் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு இம்முறை ஜனாதிபதி தேர்தல் மிக முக்கியமானது. ஜனாதிபதி யார் என்ற அடிப்படையில்தான் பின்னர் நாடாளுமன்ற தேர்தல்களும், மாகாணசபைத் தேர்தல்களும் நடக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருக்கே தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்றதொரு பொதுக் கருத்துண்டு. அதற்குக் காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்து வந்தமையே ஆகும். எப்படியும் தமக்கே தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தில் சஜித் இருந்தால் அவர் தன்னைத் தானே ஏமாற்றுபவர் ஆகிவிடுவார்.

கோத்தபயாவைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை சிங்கள வாக்குகளை அவரே பெறுவார். தமிழர்கள் எவருக்கும் வாக்களிக்காமல் விட்டால் கட்டாயம் அவரே வெல்வார். கோத்தபயாவிற்கு எந்த தன்மானத் தமிழனும் வாக்களிக்க மாட்டார் என்று நான் முன்னர் கூறியுள்ளேன்.

சஜித் எந்தவித நன்மையைப் பெற்றுத் தருவேன் என்று தமிழர்களுக்குக் கூறாது விட்டு தமிழர்கள் எவருக்கும் வாக்களிக்காது விட்டால் அது கோத்தபயாவிற்கே நன்மையாகப் போய்விடும். கோத்தபயா தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக என்ன செய்யப் போகின்றார் என்று எதுவும் கூறத்தேவையில்லை. ஆனால் சஜித் எமக்கு என்ன தரப்போகின்றார் என்று கூறாது விட்டு தமிழர்கள் அவருக்கு வாக்களிக்காது விட்டால் கட்டாயம் கோத்தபயா வெல்வார்.

கோத்தபயா வென்றால் தமிழர்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போய்விடுவார்கள் என்று தமிழர்கள் அஞ்சுவது புரிகின்றது. அவ்வாறு அவர் நடந்து கொள்ள மாட்டார் என்றே தோன்றுகின்றது. அந்த அளவிற்கு உலக நாடுகள் அவரை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவர் வந்தால் சர்வதேச ரீதியாக எமக்கு நன்மையே அல்லாது தீமையில்லை.

தற்போதிருக்கும் நிலையில் அவர் சீனாவைச் சார்ந்தே செல்ல வேண்டிய நிலையில் உள்ளார். இதை இந்தியாவும் அமெரிக்காவும் விரும்ப மாட்டார்கள். அதனால் இந்தியாவும் அமெரிக்காவும் தமிழ் மக்கள் சார்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அது எமக்கு நன்மை தரும்.

அமெரிக்காவுடன் கள்ள உறவு கோத்தபயாவிற்கு இருப்பதாக கூறப்படுகின்றது. அப்படி இருந்தாலும்கூட அமெரிக்கா கோத்தபயாவை வழி நடத்தவே பார்க்கும். அது தமிழர்களுக்கு சார்பாகவே இருக்கும். ஏனென்றால் எமது புலம் பெயர் தமிழரின் செல்வாக்கு அமெரிக்காவில் இருப்பது கண்கூடு.

ஆகவே சஜித் எமக்குத் தரப் போவதை அவர் தெளிவாக வெளிப்படையாகக் கூறவேண்டும். அதனால் அவருக்கு வரப்போகும் சிங்கள வாக்குகள் குறைந்து விடமாட்டா. ஆனால் தமிழ், முஸ்லிம் வாக்குகளை அவரை வெல்ல வைக்கும். தமிழ் மக்களின் பாரம்பரிய வதிவிடங்களை ஏற்கனவே பல ஆவணங்களில் இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆகவே பாரம்பரிய தமிழ் பேசும் பிரதேசங்கள் எவை என்பதை சஜித் ஏற்க வேண்டும். அப்படியானால் அவர்களுக்கு வழங்கப் போகும் தீர்வை அவர் வெளிப்படையாகக் கூறவேண்டும்.

வேண்டுமெனில் புத்தரின் போதனைகளே தம்மை வழிநடத்துவதாகக் கூறி எமக்கு அவர் தரப்போவனவற்றைக் கூறி வைக்கலாம். எம்மைப் பொறுத்தவரையில் அவர் தருவதை ஏற்கும் நிலையில் நாம் இல்லை. எம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட உரித்துக்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு திருப்பித்தர வேண்டும் என்பது சம்பந்தமாகவும் எமது முன்மொழிவுகளை இந்த அரசிற்கு ஏற்கனவே சொல்லியாகி விட்டது.

ஆகவே சஜித் எதைத் தருவார் என்று முதலில் அவரின் தேர்தல் அறிக்கையைப் பரிசீலித்துப் பார்ப்போம். அதன் பின் அவரின் நிலைப்பாட்டைக் கேட்டறிவோம். பின்னர் நடவடிக்கையில் இறங்குவோம். இப்போது பொறுமை காப்போம். என்று கூறினார்.