சஜித்தை ஆதரிக்க தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரிக்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

இதற்கான தீர்மானத்தை கட்சியின் உயர்குழு ஏகமனதாக அங்கீகரித்துள்ளது. அத்துடன், ஐ.தே.முவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதுடன், சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடி இதற்கு இணக்கம் காணவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை 10 மணிக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழு கூடியது.

கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான அமைச்சர் பழனி திகாம்பரம், வி.இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், அரவிந்த குமார், கூட்டணியின் பொதுச் செயலாளர் சந்திரா சாப்டர், பிரதி செயலாளர் சண் பிரபாகரன், அந்தனி லோரன்ஸ், கே.ரீ. குருசாமி, சிறிதரன், சரஸ்வதி சிவா, உதயகுமார், புத்திர சிகாமணி, அனுஷா சந்திரசேகரன், விஜயசந்திரன் உட்பட முக்கிய தலைவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற வேண்டிய விடயங்கள் தொடர்பில் கூட்டணியின் தலைவர்கள் தீர்க்கமாக கலந்துரையாடிள்ளதுடள், சஜித் பிரேமதாசவுடன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய உடன்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளனர்.