கோவிட் – 19 தடுப்பூசி வழங்கல் திட்டம்-  மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் விளக்கம்

கோவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 50,000 தடுப்பூசிகள் யாழ் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றன. இவை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் வழிகாட்டலுக்கமைவாக கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்கள்களின் எண்ணிக்கையின் முன்னிலை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்ன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் “இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட மே 30ம் திகதி 2947 பேருக்கும், மே 31ம் திகதி 6123 பேருக்கும், ஜூன் 1ம் திகதி 13,822 பேருக்கும், ஜூன் 2ம் திகதி 23,454 பேருக்கும், ஜூன் 3ம் திகதி 1740 பேருக்கும், மொத்தமாக 48,086 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கும் பணியாளர்களுக்கும் 1இ194 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

எனவே இன்று மாலை வரை (03.06.2021) மொத்தமாக 49,280 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிலவகை மருந்துகள், ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கும், மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பளை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் 05.06.2021 சனிக்கிழமை தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்குவதற்காக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் அடுத்த கட்டமாக வழங்கப்படவிருக்கும் தடுப்பூசிகள் விரைவில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமிடத்து ஏனைய கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தொடர்ந்து தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படும்” என்றார்.