கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமையின் நிலை என்ன? – அமெரிக்கா பதில்

தனது அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அரச தலைவர் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சா தெரிவித்தபோதும் அமெரிக்காவின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதிவில் அது குறிப்பிடப்படவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் தமது பதிவேடுகள் ஒரு சில மாதங்களுக்கு முன்னைய தகவல்களையே கொண்டிருக்கும் என சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா தெப்லிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று (19) கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
எமது ஆவணங்கள் ஒரு சில மாதங்களின் முன் உள்ள தகவல்களைக் கொண்டதாகவே வெளியிடப்படும், எனவே புதிய தகவல்கள் எதிர்வரும் ஆவணங்களில் காணப்படும்.

குடியுரிமையை துறப்பதற்கு சில வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும், அதனை கைவிடுவது சாத்தியமானதே. ஆனால் ஒரு குறிப்பிட்ட நபரின் தகவல் தொடர்பில் என்னால் பதிலளிக்க முடியாது. அது எமது நாட்டின் சட்டங்களுக்கு முரனானது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சிறீலங்கா இராணுவத்தளபதியாக நியமனம் பெற்றது கவலைதரும் விடயம், இது எமது நாட்டின் நிலைப்பாடு. ஆனால் ஒரு நாட்டிற்கு ஆணையிடுவதற்கும், கவலை தெரிவிப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. அமெரிக்காவின் அரசியல் மற்றும் முடிவுகளை பகிர்ந்துகொள்வதே எனது கடமை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.