Tamil News
Home செய்திகள் கோத்தபயாவின் குடியுரிமையை நிரூபிக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்த பிக்கு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்

கோத்தபயாவின் குடியுரிமையை நிரூபிக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்த பிக்கு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கோத்தபயா ராஜபக்ஸவின் சிறிலங்கா குடியுரிமை ஆவணங்களை சமர்ப்பித்து நிரூபிக்க வேண்டுமென கோரி, கடந்த 10ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்த பிக்குவின் உண்ணாவிரதம் நேற்று நள்ளிரவுடன் முடிவிற்கு வந்தது.

கடந்த 10ஆம் திகதி முதல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர், கோத்தபயாவின் சிறிலங்கா குடியுரிமை ஆவணங்களை 03 தினங்களுக்குள் வெளியிட வேண்டுமெனக் கோரி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

இதேவேளை நேற்று(13) நள்ளிரவு குறித்த பிக்குவை புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசா சந்தித்து, உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரியதை அடுத்து பிக்கு உண்ணாவிரதத்தை கைவிட்டார். இதற்கு முன்னர் பொதுஜன முன்னணிக்கு ஆதரவான பௌத்த பிக்குமார்களும் இந்த உண்ணாவிரதத்தை கைவிடும்படி கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். ஆனால் இவர்களின் கோரிக்கையை ஏற்காது பிக்கு உண்ணாவிரதத்தை தொடர்ந்து மேற்கொண்டிருந்தார்.

அம்பாந்தோட்டையில் நேற்று(13) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாசா உரையாற்றும் போது, கோத்தபயாவின் அமெரிக்க குடியுரிமை சர்ச்சை மீண்டும் எழுந்ததைத் தொடர்ந்து, கோத்தபயா தரப்பினர் பலவிதமான ஆவணங்களை ஊடகங்களுக்கு வழங்கியிருந்தனர். எனினும் அவை போலியானவை என  குறிப்பிட்டார்.

Exit mobile version