கோட்டாவின் கொள்கை விளக்கம் நாளை! அடுத்த நகர்வுக்கு காத்திருக்கும் கூட்டமைப்பு

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரை நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்துத் தனது புதிய அரசின் கொள்கைத் திட்டவுரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிடவுள்ளார். அந்தக் கொள்கை அறிவிப்பின் அடிப்படையில், தங்களது அடுத்த கட்டத் தீர்மானங்களைத் தாங்கள் மேற்கொள்ள உள்ளனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர் –

“வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தித்திட்டங்களுக்கான நிதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பிரதமருடன் பேச்சு நடத்துவதற் குத் திட்டமிட்டுள்ளோம். இன்று அல்லது நாளை கூடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படும்” என்றார்.