கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இரட்டைப் பிரஜாவுரிமை போலி

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இரட்டைப் பிரஜாவுரிமை போலி ஆவணமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அது நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பெரும் இழுக்காகும் என சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.

கோட்டாபய ராஜபக்ஷக்கு இரட்டைப் பிரஜாவுரிமை இருப்பதாகக் கூறி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கக் கோரி ‘புரவெசி பலய’ அமைப்பின் இணை அமைப்பாளரான காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த றிட் மனுவானது நேற்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே சட்டத்தரணி இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

வழக்கு விசாரணையின் போது 2005 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதியன்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இரட்டைப் பிரஜாவுரிமையை சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

மேலும் பிரஜாவுரிமை வழங்குவது தொடர்பான அமைச்சில் 2005 நவம்பர் 18 ஆம் திகதிக்கும் 2005 நவம்பர் 22 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் செயலாளர் ஒருவர் இருக்கவில்லையென்றும் அவ்வாறானதொரு நிலையில் செயலாளர் சார்பில் வேறு எவரும் கையொப்பமிட முடியாத பட்சத்தில் இச் சான்றிதழ் போலியாகவே தயாரித்து வழங்கப்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணி பெர்ணான்டோ குறிப்பிட்டார்.