கோட்டாபய அரசு உடன் வாபஸ் பெறவேண்டும்! போராட்டத்தில் இறங்கிய யாழ்.பல்கலை கல்லூரி மாணவர்கள்

தற்போது அரசாங்கம் எடுத்துள்ள பல்கலைக்கழக கல்லூரிகள் மூடும் முடிவினை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியிருந்தனர்.

இது தொடர்பில் கருத்துரைத்த மாணவர்கள்,

தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளையும் மூடுவதற்கு முஸ்தீபு எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.

தற்போது அரசாங்கம் எடுத்துள்ள பல்கலைக்கழக கல்லூரிகள் மூடும் முடிவினை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்” என்றனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், மாணவர்கள் வாழ்க்கை உங்களுக்கு விளையாட்டா? மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்.

பல்கலைக்கழக கல்லூரி நீடிக்குமா? நீதி வேண்டும் கல்வி கற்க நீதி வேண்டும் போன்ற பதாதைகளை தாங்கியவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது குறிப்பிட சில மாணவர்கள் மாத்திரம் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி பணிப்பாளரை சந்தித்து கதைத்ததன் பின்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

இதேவேளை, நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழக கல்லூரிகளில் சீருடைகள் கட்டாயப் படுத்தப் படாத நிலையில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் பல்கலைக்கழக கல்லூரியில் மட்டும் சீருடையை கட்டாயப்படுத்தி உள்ளதாக அவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.