கோட்டாபய அரசு நாட்டை நாசமாக்கியதுதான் மிச்சம் – இரா.சம்பந்தன்

இலங்கையில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் உச்சமடைவதற்கு அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகள்தான் காரணம் என்று குற்றம் சுமத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்த அரசு  மக்களைப் பேரவலத்துக்குள் தள்ளி நாட்டை நாசமாக்கியதுதான் மிச்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது வரையில் கொரோனாவால் 158,333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் 1,133 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள சம்பந்தன்,

 “அரசு கூறும் புத்தாண்டு கொரோனா கொத்தணிக்கு பொதுமக்கள் பொறுப்பு அல்ல. அரசுதான் முழுப்பொறுப்பு.

தமிழ் – சிங்களப் புத்தாண்டுடன் நாட்டைக் குறைந்தது இரண்டு வாரங்களுக்காவது அரசு முழுமையாக முடக்கியிருந்தால் இந்த பேராபத்தை மக்கள் சந்திக்க வேண்டி வந்திருக்க மாட்டாது.

கொரோனா தொற்று அசுர வேகத்தில் அதிகரிக்க ஆரம்பித்தபோது அது தொடர்பில் துளியளவும் கவனம் செலுத்தாத அரசு, கொழும்புத் துறைமுக நகர விசேட பொருளாதார வலய ஆணைக்குழு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்குடனே செயற்பட்டது. அதில் தற்போது அரசு வெற்றியும் கண்டுள்ளது. ஆனால், நாடோ பேராபத்தில் சிக்கியுள்ளது” – என்றார்.