கொரோனில் மருந்தை விநியோகிக்க ஹரியானா அரசு முடிவு

சாமியார் பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி ஆயுர்வேத்’ நிறுவனம் தயாரித்த ‘கொரோனில்’ மருந்து ஹரியானா மாநிலத்தில் உள்ள கோவிட்-19 தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் என்று அந்த மாநிலத்தின் சுகாதார அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

இந்த மருந்தை வழங்குவதற்கான பாதி செலவை பதஞ்சலி நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் என்றும் மீதி பணம் மாநில அரசின் கோவிட் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் இந்த கொரோனில் மருந்து கோவிட்-19 தொற்றை குணப்படுத்தும் என்று கூறி அறிமுகம் செய்த பதஞ்சலி நிறுவனம், பின்னர் அது நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதற்கான மருந்து என்று கூறியது.

அலோபதி மருத்துவ முறை காலாவதியானது மற்றும் அறிவிலித்தனமானது என்று சாமியார் ராம்தேவ் சமீபத்தில் கூறியது சர்ச்சையை கிளப்பி இருந்தது. கொரோனாவால் இறப்பதைவிட இந்தியாவில் அலோபதி மருத்துவ முறையால் இறப்பவர்கள்தான் அதிகம் என்று அவர் கூறியிருந்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்த மருத்துவ சங்கங்கள் அவர் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தன. இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் அவரது கருத்து மிகவும் துரதிருஷ்டவசமானது என்று பாபா ராம்தேவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதன் பின்பு தமது கருத்தை ராம்தேவ் திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறி இருந்தார்.

நன்றி பிபிசி