Home செய்திகள் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நலத்திட்டத்தை ஈழத் தமிழ்க் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்துமாறு து.ரவிக்குமார்...

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நலத்திட்டத்தை ஈழத் தமிழ்க் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்துமாறு து.ரவிக்குமார் வேண்டுகோள்

கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலவாழ்வுக்கான ஒரு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அந்த நலத்திட்டத்தை இந்தியாவிலிருக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்துமாறு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் து.ரவிகரன் அவர்கள் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில்,

கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலவாழ்வுக்கான மிகச் சிறந்த திட்டமொன்றைத் தங்களுடைய தலைமையிலான அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. பெற்றோரை இழந்து ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா 5 இலட்ச ரூபாய் வைப்பீடு செய்து அந்தக் குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது அது வட்டியோடு வழங்கப்படும் என்றும், நோய்த் தொற்றில் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக 3 இலட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் அந்த நலத்திட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டிலுள்ள அகதி முகாம்களிலும் கொரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பினால் பலர் அல்லலுற்று வருகின்றனர். அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்து தருவதற்குத் தங்களது தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்ற போதிலும், இந்த நோய்த் தொற்றில் சிலர் உயிரிழந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் தும்பல அள்ளி அகதிகள் முகாமைச் சேர்ந்த பிரகாஷ் (41) என்பவர் கடந்த 16.05.2021 அன்றும், தியாகராஜா இராசையா என்பவர் கடந்த 21.05.2021 அன்றும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதுபோல மேலும் பல முகாம்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன்.

தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களையும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இணையாகவே கருதி அரவணைத்து வரும் திமுக அரசு, இந்த நலத் திட்டத்தையும் அவர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த திரு தியாகராஜாவின் குடும்பத்தில் அனிஷ்(11) என்ற மகனும் திருமதி இருதயநாயகி(47) என்ற மனைவியும் உள்ளனர். உயிரிழந்த திரு பிரகாஷின் குடும்பத்தில் பிசன்யா(13) மற்றும் பிரைஸ்லின் ஜாய்(09) ஆகிய இரு குழந்தைகளும் திருமதி நதியா(38) என்ற மனைவியும் உள்ளனர் அவர்களுக்கு இந்த நலத்திட்டத்தின் அடிப்படையில் ரூபாய் 3 இலட்சம் கிடைத்திட கருணையோடு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Ravi 01 கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நலத்திட்டத்தை ஈழத் தமிழ்க் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்துமாறு து.ரவிக்குமார் வேண்டுகோள்

Exit mobile version