Tamil News
Home செய்திகள் கொரோனா அதிகரிப்பு – மூடப்படுகின்றது யாழ். மாநகரின் மத்திய பகுதி

கொரோனா அதிகரிப்பு – மூடப்படுகின்றது யாழ். மாநகரின் மத்திய பகுதி

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றாளர்கள்  எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், யாழ்ப்பாணத்தின் நகரை அண்மித்த முக்கிய பகுதிகள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கூடிய கொரோனா தடுப்பு செயலணி, குறித்த தீர்மானத்தினை அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று மட்டும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் யாழில் 150 பேருக்குத் தொற்று இனங்காணப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

அதே நேரம்  இலங்கையில், 90514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 551 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படும் என்றும் கே.கே.எஸ் வீதி சத்திரச்சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மட்டும் 10 நாள்களுக்கு இடைநிறுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

அத்தோடு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டு,  சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் வீடுகளில் நடத்த அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகளாக, உயிரிழந்தோரின் இறுதிக் கிரிகைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுகின்றனர். யாழ்ப்பாணம் மாநகரில் மக்களின் தேவையற்ற நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் கோட்டைப் பகுதிக்கு மாற்றப்படுவதுடன், வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version