கொரோனா அச்சம்: மீன் உணவைத் தவிர்க்கும் இலங்கையர்கள்?

இலங்கையில் மினுவங்கொட மற்றும் பேலியகொட பகுதிகளில் இதுவரை சுமார் 6000திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கோவிட்-19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இந்த தொற்றின் பின்னர், நாட்டு மக்கள் மீன்களை கொள்வனவு செய்வதில் அச்சப்பட்டு மீன் உணவு வகைகளை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பேலியகொட மீன் சந்தையிலிருந்தே நாடு முழுவதும் மீன்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மீன் விற்பனையாளர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டமை அண்மை காலமாக உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.

கடற்றொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் கோவிட் தொற்று பரவி வருகின்றமையினால், நாட்டு மக்கள் மீன்களை கொள்வனவு செய்வதை பெருமளவு நிறுத்திக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக மீனவர்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.