Tamil News
Home செய்திகள் கொரோனாவின் பிடிக்குள் நாங்கள்; விடுதலையைத் துரிதப்படுத்துங்கள் – அரசியல் கைதிகள்

கொரோனாவின் பிடிக்குள் நாங்கள்; விடுதலையைத் துரிதப்படுத்துங்கள் – அரசியல் கைதிகள்

தமது விடுதலையை துரிதப்படுத்துவதுடன், தமக்கான உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுமாறு கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகள் அவசர வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக சுகாதார அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இந்த அவசர கோரிக்கையை ஊடகங்கள் வாயிலாக அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களிடம் முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகளும் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் ஜி.எச். விடுதிகளில் 48 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். கொழும்பு நகரப் பகுதிகளிலும் சிறைச்சாலைகளிலும் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனாத் தொற்று காரணமாக நாம் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதிகளிலேயே எமக்கான சுயதனிமைப்படுத்தலைக் கடைப்பிடித்து வந்தோம். எனினும், கடந்த இரண்டு வாரங்களாக அனைத்து அரசியல் கைதிகளுக்கும் கடும் காய்ச்சலுடன் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.

நேற்று எமது விடுதிகளைச் சேர்ந்த சிலருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. ஆகவே, மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது எனச் சிறைச்சாலையில் பொதுச் சுகாதாரப் பிரிவு கவனப்படுத்தியுள்ளது.

போதிய தொற்று நீக்கல் செயற்திட்டம் மற்றும் ஊட்டச்சத்தான உணவு பராமரிப்பு இன்மைகளுக்கு மத்தியில் நாம் தொடர்ந்து விடுதிகளிலேயே சுயதனிமைப்படுத்தல் முறையை மேற்கொண்டு வருகின்றோம். நீண்டகாலம் சிறைத்தடுப்பிலுள்ள எம்மவர்களுள் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் வயதானவர்களும் இருப்பதால் அரசியல் கைதிகள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது என்பதனைத் தெரியப்படுத்துகின்றோம்.

இவ்வேளையில் அரசியல் கைதிகளான எமது விடுதலையைத் துரிதப்படுத்துவதுடன், எமது உடனடி உடல் நலமேம்பாட்டுக்கும் உதவி புரியுமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கோரி நிற்கின்றோம்” என்றுள்ளது.

Exit mobile version