கைதிகளை நிபந்தனையற்று விடுதலை செய்ய  செ.கஜேந்திரன் வலியுறுத்தல்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கும் கொரோனா வைரஸால்  ஆபத்து ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய செல்வராசா கஜேந்திரன், தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையற்று விடுதலை செய்ய  வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் இன்று நாடாளுமன்றத்தில்  உரையாற்றும்போது,

“சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கும் கொரோனா வைரஸால் அச்சுறுத்தலும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. தொற்றா நோய் காரணமாகவே பலருக்கு இந்தக் கொரோனாத் தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது என ஜனாதிபதியும் கூறியிருக்கின்றார். அந்தவகையில் மிகவும் கொடிய சட்டமாகிய பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் பலர் இன்று நீரிழிவு நோய் உட்பட தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமையைக் கருத்தில்கொண்டு நிபந்தயைற்று அவர்களை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் பிணையில் சரி அவர்களை விடுவிக்க வேண்டும்” என்றார்.