கூட்டமைப்புடன் பேச மறுக்கும் ஜனாதிபதி புலம்பெயர் தமிழரை அழைப்பது வேடிக்கை; சுமந்திரன்

புலம்பெயர் தமிழரை அழைப்பது வேடிக்கை
இலங்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச மறுக்கும் ஜனாதிபதி, நியூயோர்க்கில் இருந்துகொண்டு பேசுவதற்கு புலம்பெயர் தமிழரை அழைப்பது வேடிக்கையானது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான உரை குறித்த சபை ஒத்தி வைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

“2009 மே 26 ஆம் திகதி பான் கி மூன் இலங்கை வந்திருந்த போது அவருடன் மஹிந்த ராஜபக்‌ஷ இணைந்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதேபோன்றே தற்போது கோட்டாபய ராஜபக்‌ஷவும் கூறுகின்றார். இவர் இப்படி கூறுகையில், நாங்கள் வெளியக பொறிமுறையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று வெளிவிவகார அமைச்சர் கூறுகின்றார். இது இரண்டுவிதமான பேச்சு .

இந்நிலையில், புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமையை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் இந்த வருடம் ஜூலை மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேச்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இறுதி நேரத்தில் அது நடத்தப்படவில்லை. நாங்கள் இரண்டு மாதங்களாக அதற்காக காத்திருக்கின்றோம். ஆனால் இலங்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச மறுக்கும் ஜனாதிபதி , நியூயோர்க்கில் இருந்துகொண்டு புலம்பெயர் தமிழர்க ளை பேச அழைப்பது வேடிக்கையானது அவர் கட்டாயம் எங்களுடன் பேச வேண்டும். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இங்கே இருக்கின்றார்கள்” என்றார்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021