Tamil News
Home செய்திகள் குடிவரவு – குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்!

குடிவரவு – குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்!

குடிவரவு – குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், தேசிய ஊடக மத்திய நிலையம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

அமைச்சர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச சார்பற்ற அமைப்புகளுக்கான செயலகம், இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு, தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மைகள் மற்றும் துணை நிறுவனங்களும், இலங்கை கணினி அவசர பதில் நடவடிக்கைக்கான ஒன்றியம் உட்பட 31 திணைக்களங்களும், நிறுவனங்களும், அரச கூட்டுத்தாபனங்களும் பாதுகாப்பு அமைச்சின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம் என்பன கடந்த ஆட்சியில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின்கீழ் இருந்தன.

பாதுகாப்பு அமைச்சராக இதுவரையில் எவரும் நியமிக்கப்படாத நிலையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version