கிழக்கில் தமிழர்களின் அடையாளங்களை அழித்ததுபோல் வன்னியிலும் அழிக்க முற்படுகின்றனர்

கிழக்கில் தமிழர்களின் அடையாளங்களை அழித்ததைப்போல் வன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முற்படுகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா கற்குளத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

1948 ஆம் ஆண்டு முதல் மகாவலி அதிகாரசபை, வனவள சபை, வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் என நான்கு திணைக்களங்களும் நேரடியாக மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டு தமிழர்களின் நிலங்களை அபகரித்து அதில் சிங்கள மக்களை குடியேற்றி தமிழர்களின் இன விகிதாசாரத்தினை இல்லாதொழிக்கும் செயற்பாடு நடைபெற்று வருகின்றது.

வன்னியில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் தற்போதைய ஆட்சியாளர்களை கொண்ட அரசாங்கம் 2009 ஆம் ஆண்டின் பின்னர் அதிகமாக எங்களுடைய பிரதேசத்தில் மகாவலி மூலம் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர்.

அதனடிப்படையில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களை வைத்து தமிழ் வாக்குகளை பிரித்து ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரை கொண்டு வருவதற்கு திட்டமிடுகின்றனர்.

இதனூடாக எவ்வாறு கிழக்கில் தமிழர்களின் அடையாளங்களை அழித்தார்களோ அதேபோல் வன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முற்படுகின்றனர்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் தமிழர்களுடைய காணிகளிலும் தமிழர்களுடைய அரச காணி விடயத்திலும் சிங்கள மக்களினுடைய செயற்பாடுகள் அதிகாரத் தொனியில் இருக்கின்றது.

இதற்கு காரணம் இன்றைய ஆட்சியாளர்கள் செயலாளர்களாகவும் அதிகாரிகளாகவும் இராணுவ அதிகாரிகளை நியமித்திருக்கின்றார்கள்.

இராணுவ அதிகாரிகளை நியமித்ததன் ஊடாக இலங்கை ஜனநாயக நாடா அல்லது இராணுவ ஆட்சிக்குத் தயாராகின்றதா என்ற கேள்வி எங்கள் மத்தியில் இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் வன்னியில் தமிழர்களுடைய வாக்கு வீட்டுச் சின்னத்தைத் தவிர்த்து வேறு சின்னத்திற்கு செல்லக்கூடாது. அவ்வாறு வாக்களித்தால் நாங்களாகவே வன்னியில் ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரை உருவாக்குவதற்கு வழிவகுத்து விடுவோம். இது எமது மக்களுக்குள்ள அச்சுறுத்தலாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.