வவுனியாவில் நேற்று (25) இரவு மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வவுனியா காவல்துறையினரால் நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தமது உடமையில் கஞ்சா பொதிகளுடன் நடமாடிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 20, 21, 21, 22, 31 வயதினை உடைய மகாரம்பைக்குளம், பூந்தோட்டம், மதகுவைத்தகுளம் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களின் உடமையிலிருந்து 8740 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களிடமும் கஞ்சா எப்படி, எங்கிருந்து வந்ததென விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விசாரணையின் பின்னர் ஐவரையும் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர் .