காத்திரமான தீர்மானத்தை பிரித்தானியா முன்வைக்க வேண்டும் – மன்னிப்புச் சபை

எதிர்வரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் பிரித்தானியா ஒரு காத்திரமான தீர்மானத்தை முன்வைக்க வேண்டும், அதனை நடைமுறைப்படுத்துவதில் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிக அக்கறை காண்பிக்க வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதன் பணிப்பாளர் டேவிட் கிறிபிற் மேலும் தெரிவித்துள்ளதாவது:

போர் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்த நிலையிலும் அங்கு மனித உரிமைகளின் மேம்பாடு தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது அங்குள்ள நிலமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் சிறீலங்கா அரசு 30/1 என்ற தீர்மானத்தில் இருந்து விலகியுள்ளது. அதாவது அங்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை அது தொடர்ந்து மறுத்து வருகின்றது. இந்த நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும்.

தனது பரிந்துரைகளை நிறைவேற்றும் பொறிமுறை ஒன்றை மனித உரிமைகள் அணைக்குழு மேற்கொள்ள வேண்டும். சாட்சியங்களை சேகரித்து சிறீலங்காவின் தற்போதைய நிலையை உன்னிப்பாக அவதானித்து செயற்படும் குழுவை அமைக்க வேண்டும்.

பிரித்தானியா அரசு தனது கூட்டணி நாடுகளுடன் இணைந்து காத்திரமான தீர்மானத்தை முன்வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.