Tamil News
Home செய்திகள் காணிகள் அபகரிப்பு-வேலணையில் மக்கள் போராட்டம்

காணிகள் அபகரிப்பு-வேலணையில் மக்கள் போராட்டம்

பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலணை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்- வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மண்கும்பான் பிரதேசத்தில் 11 பேருக்கு சொந்தமான 5 ஏக்கர் காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காணி உரிமையாளர்களும் பிரதேச மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினரின் தேவைகளுக்காக அபகரிக்கும் நோக்கில் நிலஅளவைத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடு நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீண்டும் மக்களிடமே வழங்க கோரியும் வேலணைப் பிரதேச செயலகத்திற்கு  காணி உரிமையாளர்கள், பொது மக்கள் பேரணியாகச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதேச செயலாளரிடம்  மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் சோதிநாதன், “இந்தக் காணிகளை சுவீகரிக்க முயற்சி முன்னெடுக்கப்பட்டாலும் அதில் மக்களுக்கு விருப்பமின்மை அல்லது மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், அதனை தாம் தற்காலிகமாக இடை நிறுத்துவதாகவும் இது தொடர்பில் காணி அமைச்சிக்கு தெரியப்படுத்தி அதன்பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்க முடியும்” என்று  தெரிவித்தார்.

Exit mobile version