காணாமல் போயிருந்த வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உடலம் கண்டெடுப்பு

காணாமல் போயிருந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரனின் (37) உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவரை , நேற்று (24) மாலை முதல் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அவரது மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை, அலைபேசி உள்ளிட்டவை யாழ். தொண்டைமானாறு இந்து மயானத்துக்கு அருகிலிருந்து நேற்றிரவு மீட்கப்பட்டிருந்தன.

சம்பவத்தையடுத்து வல்வெட்டித்துறை காவல்துறையினர்விசாரணைகளை முன்னெடுத்தனர். அத்துடன் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்

இன்று (25) காலை அவர் தொண்டைமானாறு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்ட நிலையில் காவல்துறையினர்  இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் செந்தூரன் மக்களுக்கான உதவிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.