சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியும் கவன ஈர்ப்பு போராட்டமும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து காணாமல்போன உறவினர்களினால் கவன ஈர்ப்பு பேரணியொன்று காந்திபூங்கா வரையில் நடைபெற்றது.
இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் காணாமல்போன உறவுகளின் படங்களை ஏந்தியிருந்ததுடன் சர்வதேச சமூகம் தமது பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்ற பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
வலிந்து காணாமல்போன உறவுகளின் இந்த போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமது ஆதரவினை வழங்கியிருந்ததுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கவன ஈர்ப்பு பேரணியானது காந்திபூங்காவினை வந்தடைந்ததுமன் அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்ஆணைக்குழுவின் ஆணையாளருக்கு அனுப்புவதற்கான மகஜர் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைத்தலைவியான மதனா பாலகிருஸ்ணராஜாவினால் வாசிக்கப்பட்டு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அஸீஸிடம் வழங்கப்பட்டது.
காணாமல்போன தமது உறவுகள் குறித்து இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான ஏமாற்றத்தினை தந்துவரும் நிலையில் சர்வதேச சமூகம் தமக்கான நீதியைப்பெற்றுத்தரவேண்டும் என்ற கோரிக்கை இங்கு முன்வைக்கப்பட்டது.
காணாமல்போன உறவுகளை தேடிதேடி மனநோய்க்கும் பல்வேறு நோய்களுக்கும் உறவுகள் உள்ளாகிவரும் நிலையில் இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் அக்கரையற்ற நிலையில் இங்கு இருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.