காடுகளை பாதுகாக்கும் பழங்குடி தலைவர் பதுங்கியிருந்து தாக்கிக் கொல்லப்பட்டார்

பிரேசிலின் அமேசன் காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பழங்குடியின தலைவர் ஒருவர் பதுங்கித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

பழங்குடியினத்தவர்களின் பகுதிகளில் மரங்கள் வெட்டப்படுவதை தடுப்பதற்கான காட்டின் பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவரான போலோ பவுலினோ குவாஜஜரா என்ற இளம் பழங்குடியின தலைவரே கொல்லப்பட்டுள்ளார்.

இந்த வருட ஆரம்பத்தில் ரொய்ட்டரிற்கு கருத்து தெரிவிக்கையில் சில வேளைகளில் நான் அச்சமடைந்துள்ளேன் ஆனாலும் நாங்கள் எங்கள் தலையை நிமிர்த்தி செயற்படவேண்டியுள்ளது இங்கு யுத்தம் இடம்பெறுகின்றது என அவர் தெரிவித்திருந்தார்.

இயற்கை பல வழிகளில் அழிக்கப்படுகின்றது மிகவும் பெறுமதியான மரங்கள் வெட்டப்படுகின்றன நாங்கள் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இதனை பாதுகாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

குறிப்பிட்ட பகுதிக்குள் ஊருடுவிய சட்டவிரோதமாக மரம்தறிப்பவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

பழங்குடியினத்தை சேர்ந்த மற்றொருவரும் இதன் போது காயமடைந்துள்ளார்.

இதன் பின்னர் இடம்பெற்ற மோதலின் போது சட்டவிரோதமாக மரங்களை தறிக்கும் குழுவை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரேசிலின் பழங்குடி இன மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஏபீஐபி அமைப்பு பிரேசில் ஜனாதிபதியும் அரசாங்கமும் இதற்கு பதிலளிக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.

பிரேசில் அரசாங்கத்தின் கரங்களில் பழங்குடியினத்தவர்களின் குருதி படிந்துள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எங்கள் மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகளால் எங்கள் மக்கள் இலக்குவைக்கப்பட்டுள்ளனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது