காசா- இஸ்ரேல் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா வலியுறுத்தல்

இஸ்ரேல் காசாவில் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் 16 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளதாக  கூறப்படுகின்றது.

காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இதுவரை தங்கள் தரப்பில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 188 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 55 குழந்தைகள் மற்றும் 33 பெண்களும் அடக்கம் என்று கூறுகிறது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பாலத்தீன சுகாதார அமைச்சகம்.

இஸ்ரேலியப் படையினர் காசா மீது தொடர்ந்து எட்டாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Israel committing war crimes in Gaza, Palestinian FM tells UN | Benjamin Netanyahu News | Al Jazeera

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் அவையின் தலைவர் அன்டோனியா குடரோஸ் ” மேலும் தாக்குதல் நடத்தப்படுவது பல பகுதிகளில் கட்டுப்படுத்தவியலாத நெருக்கடி நிலையை ஏற்படுத்தும். எனவே உடனடியாக அதிர்ச்சியளிக்கும் இந்த வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று கூறியதாக அல்-ஜீரா(aljazeera) செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே அமைதி ஏற்படுத்துவது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ ஜனநாயகம், பாதுகாப்பு,சுதந்திரத்தோடு வாழ இரு நாடுகளுக்கும் உரிமை உள்ளது. அமைதியை ஏற்படுத்தும் விதமாக எனது நிர்வாகம் தொடர்ந்து செயல்படும்” என்றார்.

இந்நிலையில், கடந்த வாரம் மட்டும் ஹமாஸ் போராளிகள் சுமார் 3000 வுகணைகளை தங்கள் நாட்டின் மீது ஏவியுள்ளதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.