Tamil News
Home செய்திகள் கடல்சார்ந்த பாரம்பரியமும் இலட்சிய உறுதியும் தலைவர் பிரபாகரனுக்குப் பேராண்மை தந்தன- ஐங்கரநேசன்

கடல்சார்ந்த பாரம்பரியமும் இலட்சிய உறுதியும் தலைவர் பிரபாகரனுக்குப் பேராண்மை தந்தன- ஐங்கரநேசன்

கடல் வாழ்க்கை நில வாழ்க்கையை விடச் சவால்கள் நிறைந்தது. கடலில் போனால் திரும்பி வருவோமா என்று தெரியாத நிச்சயமற்ற வாழ்க்கை மரண பயத்தை அறவே இல்லாததாக்கியது. சூறைக் காற்றுக்கும் கொந்தளிக்கும் அலைகளுக்கும் எதிராக மேற்கொள்ளும் பயணம் பெரும் பயிற்சியாக அமைந்து உடலையும் மனதையும் வலுவாக்கியது.

நிச்சயமற்ற வருவாய், பொருள் இழப்புக் குறித்த கவலையை இல்லாமல் ஒழித்தது. இக்கடல்சார் பாரம்பரிய குணவியல்புகளுடன் இலட்சிய உறுதியும் சேர்ந்து தலைவர் பிரபாகரனுக்குப் பேராண்மையைப் பெற்றுத் தந்தன. அவரால் கடலையும் நிலத்தையும் குறிப்பிட்ட காலம் வரையிலேனும் கட்டிக்காக்க முடிந்தது. இன்று அவர் இல்லை என்று கூறப்படும் நிலையில் சூறையாடப்படும் கடலைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு நெய்தல் நில மக்களிடமே உள்ளது.

இவ்வாறு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் கடற்கோள் நினைவுநாள் நிகழ்ச்சி மாதகல் விநாயகர் இறங்குதுறையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியவை வருமாறு –

“பூமியின் வெப்பநிலை மிக உயர்வாக இருந்த ஆண்டாக நடப்பு 2023 ஆம் ஆண்டு பதிவாகி உள்ளது. வரவிருக்கும் 2024 ஆம் ஆண்டில் பூமியின் வெப்பநிலை கைத்தொழில் புரட்சி ஆரம்பமானபோது இருந்ததை விட 1.5 பாகை செல்சியஸ் அளவில் உயரும் என்று விஞ்ஞானிகளால் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது பூமியின் காலநிலையில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. பூமி சூடாகுவதால் காலநிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களால் நாம் ஏற்கனவே ஒருபுறம் கடும் மழையும் வெள்ளப் பெருக்கும், இன்னொருபுறம் கடும் வரட்சி, பனிமலைகளின் உருகுதல், கடல்மட்ட உயர்வு, பயிர் உற்பத்தி பாதிப்பு,உயிரினங்களின் அழிவு என்று பல பாதகங்களை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டோம்.

பூமியின் காலநிலையில் நிலத்தைவிட கடல் ஆற்றுகின்ற பங்களிப்புப் பெரியது. பூமியின் மீது சூரியனில் இருந்து வீழுகின்ற வெப்பத்தின் பெரும் பகுதியைக் கடல்தான் உறிஞ்சி வைத்திருக்கிறது. உறிஞ்சிய வெப்பத்தைச் சமுத்திர நீரோட்டங்களின் மூலம் பூமி முழுவதும் சமனாகப் பரவச்செய்கிறது. பூமியைச் சூடுபடுத்தும் கரியமில வாயுவைத் தன்னுள் ஈர்த்துக் கரைத்துவைத்திருக்கும் மிகப்பெரும் காபன் தொட்டியாகச்செயலாற்றுகிறது.

கடல்தான் பூமியின் சூட்டைத் தணிவிக்கும் மழை பொழிவதற்குக் காரணமாகவும் உள்ளது. ஆனால் கடலின் இருப்பும் உயிர்ப்பும் தான் எமது இருப்பும் உயிர்ப்பும் என்று தெரியாத நாம் கடலை மெல்ல மெல்லச் சாகடித்துக் கொண்டிருக்கிறோம். எமது பொருத்தமற்ற மீன்பிடி முறைகளாலும் அளவுக்கு அதிகமான மீன்பிடியாலும், கடலட்டை வளர்ப்புப் போன்ற ஒற்றையினப் பண்ணைகளாலும் கடலில் மீன் இனங்கள் அழிந்து வருகின்றன. இன்று கடலில் மீன்களை விடப் பிளாஸ்ரிக் துகள்களே அதிகமாகக் காணப்படுகின்றன. கடலில் அதிக அளவில் பிளாஸ்ரிக்கைத் தள்ளிக் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 14 ஆவது இடத்தில் உள்ளது.

கடலை எமது கழிவுகளைக் குவிக்கும் ஒரு குப்பைத் தொட்டியாகவே நாம் பாவித்துக் கொண்டிருக்கின்றோம். சூழல் மாசுபாட்டால் ஒட்சிசன் குறைவு ஏற்பட்டுப் பல இடங்களில் கடல் இறக்கத் தொடங்கியுள்ளது என்று கடலியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கடல்தான் காநிலை மாற்றப் பாதகங்களைத் தடுக்கும் கேடயம் என்பதை உணர்ந்து கடற்சூழற் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

கடலைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அனைத்து மக்களுக்கும் உண்டு. ஆனாலும் கடலின் பங்காளிகளான, கடலையே வாழ்வாதாரமாகக் கொண்ட கடற்றொழிலாளர்களுக்கு இந்தக் கடப்பாடு அதிகமாகவே இருக்கிறது. அதற்கான பட்டறிவும், பராக்கிரமும் இவர்களிடம்தான் அதிகளவில் இருக்கிறது. கடற்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அவசரப் பணியாக விரைந்து மேற்கொள்வதே பூமியில் எமது இருப்புக்கான உத்தரவாதமாக அமையும். இதுவே, கடற்கோளில் பலியான எம் உறவுகளுக்கு நாம் செலுத்தும் உண்மையா அஞ்சலியாகவும் இருக்கும்” என்று அவா் தெரிவித்தாா்.

Exit mobile version