ஒரு இலட்சம் காணித்துண்டு விவகாரமே, ஆவணங்கள் மாற்றப்பட்டமைக்கு காரணம்- மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்

இளம்தொழில் முயற்சியாளர்களிற்கு வழங்கப்படுவதாக சொல்லப்படும் காணித் துண்டுகள் தமிழர்களிற்கு செல்லக்கூடாது என்பதற்காகவே காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அவர்களால் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்,
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
‘நிலைமாறு கால நீதியின் பிரகாரம் காணிகள் விடுவிக்கப்படுவதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது முழுமையடைந்திருக்கவில்லை. குறிப்பாக காங்கேசன்துறை பகுதியில் விடுவிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட காணிகளில் இராணுவ முகாம்களும், காவல்துறையினரின் விடுதிகளும் இருக்கிறது. அத்துடன் வடக்கில் கரையோர பகுதிகளை மையமாக வைத்து காணிகள் கபளீகரம் செய்யப்படுகின்றது.
வடமாகாணத்திற்கான காணி ஆவணங்கள் யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்த நிலையில், வடமாகாணத்திற்கு தொடர்பே இல்லாத இன்னொரு மாகாணத்திற்கு மாற்றப்பட்டமை பாரிய கேள்வியை எழுப்பியுள்ளது. கடந்த 8 ஆம் திகதி வடக்கில் திடீர் என்று மின்தடை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. காணி ஆவணங்களை அனுராதபுரத்திற்கு கபளீகரம் செய்வதற்காக திட்டமிட்டே இந்த மின்தடை ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக இளம்தொழில் முயற்சியாளர்களிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் ஒரு இலட்சம் காணித்துண்டுகளிற்காக வடபகுதியில் அதிகமான இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
எனவே அவற்றை பங்கீடுசெய்து வழங்கினால் தமிழர்களிற்கே அந்த காணிகள் சென்றுவிடும் என்ற வகையில் பெரும்பான்மையினத்தை சேர்ந்த முதலாளிகளிற்கும் தனவந்தர்களிற்கும் வழங்குவதை நோக்கமாக கொண்டே அந்த ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கருதுகிறோம்.
புதுக்காடு பகுதியில் 286 ஏக்கர் காணிகள் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த தனவந்தர்களிற்கு வழங்கவுள்ளதாக அறிகிறோம். அத்துடன் கிளிநொச்சி இரணைதீவு விடுவிக்கப்பட்டாலும் அந்த மக்களிற்கான அடிப்படை வசதிகள் சரியான முறையில் பூர்த்திசெய்து கொடுக்கப்படவில்லை. அந்த மக்களின் உரிமைகளும் மறுக்கப்படுகின்றது. எனவே அவற்றை பூர்த்திசெய்து இராணுவ அடக்குமுறை அற்ற நிலமைக்கு வழிவகுக்க வேண்டும்.
போர் முடிவடைந்து 12 வருடங்கள் ஆகியும்,  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டவில்லை, போரால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளிற்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. அத்துமீறிய தொழில் நடவடிக்கைகள், என மனித உரிமைகளை மதிக்காது அரங்கேறிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிநிரல்கள் பாதிக்கப்பட்ட மக்களை மேலும்பாதிக்க வைக்குமே தவிர ஒரு சமாதான மனநிலையை உருவாக்கும் என்பது ஐயமே.
நிலைமாறுகால நீதி தொடர்பான பொறிமுறைகளை உருவாக்கும் அரசுஅவற்றை நடைமுறைப்படுத்த தயங்குவது ஏன்? அல்லது மக்களது பிரச்சினைகளில் சாதகமாக செயல்படாமைக்கான காரணம்என்ன? பாதிக்கப்பட்ட மக்களது பிரச்சினைகளை சுதந்திரமாக அவர்களது வகிபாகத்திலேயே பொருத்தமான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளாமைக்கான காரணம் என்ன? இவற்றை கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் இந்தநாட்டில் சுமூகமாக வாழ வழிவகுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்றனர்.