Tamil News
Home செய்திகள் ஒத்துழைப்பினை வழங்க முடியாதவர்கள் மாவட்டத்தினை விட்டு செல்லுங்கள் -அரசாங்க அதிபர் அதிரடி

ஒத்துழைப்பினை வழங்க முடியாதவர்கள் மாவட்டத்தினை விட்டு செல்லுங்கள் -அரசாங்க அதிபர் அதிரடி

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு ஒத்துழைப்பினை,ஒருங்கிணைப்பினை வழங்கமுடியாத உத்தியோகத்தர்கள் இந்த மாவட்டத்தினை விட்டு வெளியேறி வேறு மாவட்டத்திற்கு சென்று கடமையாற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தபாய விவசாயிகளின் நன்மை கருதி பல்வேறு செயற்;றிட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று (7) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மத்திய நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் என்.நாகரெட்னம்,மாகாண நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் வி.ராஜகோபாலசிங்கம்,மேலதிக அரசாங்க அதிபர் திருமதி முகுந்தன் நவரூபரஞ்சணி மற்றும் பிரதேச செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தற்போது பெரும்போக செய்கை ஆரம்பிக்கும் காலம் ஏற்பட்டுள்ளதனால் விவசாயிகள் விவசாயிகள் மேற்கொள்ளவேண்டிய விவசாய செய்கை தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.விவசாயத்திற்கு தேவையான நீரைப்பெற்றுக்கொள்ளுதல், உரமானியம், விவசாயிகளுக்கான வங்கிக்கடன் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

அரசாங்க வங்கிகளினால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவருகின்ற விவசாய கடன்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அரசாங்கம் முன்னெடுக்கும் விவசாயிகளுக்கான விசேட திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விவசாகள் நெற்செய்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்று உப பயிர்செய்கைக்கும் முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் எனவும் சேதன பசளைகளை அதிகளவாக பாவனைக்கு கொண்டுவரவேண்டும் எனவும் இரசாயன பசளைகள் பயன்பாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படுகின்ற நோய்தாக்கம் பற்றி விவசாயிகளை விழிப்படைய செய்யவேண்டும் என அரசாங்க அதிபர் சகலரையும் வேண்டிக்கொண்டார்.

இதன்போது கால்வாய்களிலும் குளக்கரை பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகள் முழுமையாக நிறுத்தப்படவேண்டும் என இங்கு விவசாய அமைப்புகளினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சிலர் அனுமதிப்பத்திரங்களை வைத்துக்கொண்டு அனுமதியற்ற இடங்களில் மண் அகழ்களை முன்னெடுப்பதாகவும் இது தொடர்பில் பிரதேச செயலாளர்கள் கண்காணிப்புகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட வன இலாகா தன்னிச்சையாக செயற்படுவதாகவும் இங்கு குற்றஞ்சாட்டினார்.மண் அகழ்வுக்கான அனுமதியை திணைக்களங்கள் ஊடாக உறுதிப்படுத்த மாவட்ட செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் பின்னரே கனியவளங்கள்,சுரங்க திணைக்களத்தில் மண் அகழ்வுக்கு சமர்ப்பிக்கவேண்டும்.ஆனால் வன இலாகா நேரடியாக சிபாரிசுகளை வழங்குவதாகவும் மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தல்களை முற்றாக மீறி செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மாவட்ட செயலகத்தில் விதிமுறைகளையும் பணிப்புரைகளையும் மீறி செயற்படுவோருக்கும் செயற்படும் திணைக்களங்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் இதன்போது எச்சரிக்கை விடுத்தார்.

மாவட்ட செயகலத்திற்கு ஒத்துழைப்பிணையும் ஒருங்கிணைப்பினையும் வழங்கமுடியாதவர்கள் இந்த மாவட்டத்தில் கடமையாற்ற முடியாது என தெரிவித்த அவர் அவர்கள் வேறு மாவட்டங்களுக்கு சென்று கடமையாற்றுமாறும் தெரிவித்தார்.

Exit mobile version